செய்திகள்

வியாசர்பாடியில் ரவுடி வெட்டிக்கொலை

Published On 2017-12-16 04:53 GMT   |   Update On 2017-12-16 04:53 GMT
வியாசர்பாடியில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பூர்:

வியாசர்பாடி பி.வி. காலனியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் என்கிற குள்ள கண்ணன். இவர் மீது எம்.கே.பி. நகர், வியாசர்பாடி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ரவுடியான அவர் பெயிண்டராகவும் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் அதே பகுதியைச்சேர்ந்த சுப்பு என்கிற கலைச்செல்வன், அருண்குமார், ராமலிங்கம், சந்தோஷ், மைக்கேல் ஆகிய 5 பேருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

ரவுடியான குள்ள கண்ணன் தங்களை கொலை செய்ய திட்டம் தீட்டி கொண்டிருப்பதால் 5 பேரும் அஞ்சினர். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தனர்.

அதற்காக சமயம் பார்த்து கொண்டிருந்த அவர்கள், குள்ள கண்ணனின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.

நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் குள்ள கண்ணன் தனது வீட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருட்டில் மறைந்திருந்த சுப்பு, அருண்குமார், மைக்கேல், சந்தோஷ், ராமலிங்கம் ஆகிய 5 பேர் குள்ள கண்ணனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.

தலை, கழுத்து பகுதிகளில் வெட்டுப்பட்ட குள்ள கண்ணன் ரத்து வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உடனே 5 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

எம்.கே.பி. நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குள்ள கண்ணன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடினர். இதில் அருண்குமார், ராமலிங்கம் ஆகிய 2 பேர் சிக்கினர். மற்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.

இக்கொலையால் இன்று காலை வியாசர்பாடி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News