செய்திகள்
சின்னத்துறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்.

மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி சின்னத்துறையில் 4-வது நாளாக நீடிக்கும் போராட்டம்

Published On 2017-12-12 07:18 GMT   |   Update On 2017-12-12 07:18 GMT
மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி சின்னத்துறையில் கடந்த 9-ந் தேதி தொடங்கிய இப்போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்தது. இதில் அருட்பணியாளர்கள் மற்றும் பாதிரியார்கள், மாயமான மீனவர்களின் உறவினர்கள் பங்கேற்றனர்.

நித்திரவிளை:

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை உடனே மீட்க கோரி கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமமான நீரோடியில் இருந்து தொடங்கிய போராட்டம் குழித்துறையில் ரெயில் மறியல், குளச்சலில் சாலை மறியல் மற்றும் முட்டம், ராஜாக்கமங்கலத்தில் கடலில் இறங்கும் போராட்டம் என தொடர்ந்தது.

சின்னத்துறை கடற்கரை கிராமத்தில் அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மலங்கரை சிறியன் கத்தோலிக்க திருவல்லா ஆயர் தோமஸ் மார் குரிலோஸ், அருட்பணியாளர்கள் ராஜ், செலஸ்டின், லெலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சின்னத்துறையில் கடந்த 9-ந் தேதி தொடங்கிய இப்போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்தது. இதில் அருட்பணியாளர்கள் மற்றும் பாதிரியார்கள், மாயமான மீனவர்களின் உறவினர்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தியும், கோரிக்கைகள் பற்றியும் பேசினர். இதுபோல சின்னத்துறையையொட்டியுள்ள கடற்கரை கிராமங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்தது. இதிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News