செய்திகள்

கொருக்குப்பேட்டையில் தினகரன் ஆதரவாளர்கள் 2 பேர் திடீர் கைது

Published On 2017-12-11 06:58 GMT   |   Update On 2017-12-11 06:58 GMT
கொருக்குப்பேட்டையில் டிடிவி ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்ணன் ரவுண்டானா சந்திப்பில் தினகரன் ஆதரவாளர்கள் 100 பேர் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் வசித்து வருபவர்கள் சரத்குமார். இவரது மகன் புரட்சி குமார். இவர்கள் இரு வரும் ஆர்.கே.நகரில் தினகரனுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் வழிப்பறி வழக்கில் செம்பியம் போலீசார் சரத்குமார், புரட்சி குமார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனை கண்டித்து கொருக்குப்பேட்டை கண்ணன் ரவுண்டானா சந்திப்பில் தினகரன் ஆதரவாளர்கள் 100 பேர் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் வேண்டுமென்றே தினகரன் ஆதரவாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று குற்றம்சாட்டினர். போலீசுக்கு எதிராக கோ‌ஷங்களையும் எழுப்பினார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட வர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர்.

இருப்பினும் சாலை மறியல் போராட்டத்தை தினகரன் ஆதரவாளர்கள் கைவிடவில்லை. தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நீடித்த மறியல் போராட்டம் பின்னர் கைவிடப்பட்டது. இதன் காரணமாக கொருக்குப்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே தனது ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், போலீஸ் நவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து முறையிட உள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் அளிக்க அவர் முடிவு செய்துள்ளார்.

Tags:    

Similar News