செய்திகள்

கிரானைட் முறைகேடு வழக்கு: அரசுக்கு ரூ. 699 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு

Published On 2017-11-06 08:08 GMT   |   Update On 2017-11-06 08:08 GMT
கிரானைட் முறைகேடு வழக்கில் அரசுக்கு ரூ. 699 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக இன்று மேலூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை சட்ட விரோதமாக வெட்டி எடுத்ததன் காரணமாக அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வந்தன. இது குறித்து அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர்கள் சகாயம், அன்சுல்மிஸ்ரா, சுப்பிரமணியன் ஆகியோர் விசாரணை நடத்தி பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் மீது மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் மேலூர், இடையப்பட்டி அருகே உள்ள பெரிய சூரியேந்தல்குளம், பாறை புறம்போக்கு இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பாக இன்று மேலூர் கோர்ட்டில் அரசு வக்கீல் ஷீலா, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜாசிங் ஆகியோர் தலைமையில் 1719 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் வீரமணி, கோபாலகிருஷ்ணன், பி.ஆர். பழனிச்சாமி உள்பட 34 பேர் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்து அரசுக்கு ரூ. 699 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News