செய்திகள்
முருகன்

மகள் திருமணத்திற்கு செல்ல பரோல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது - முருகன் பேட்டி

Published On 2017-10-27 02:51 GMT   |   Update On 2017-10-27 02:51 GMT
செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட முருகன், தனது மகள் திருமணத்திற்கு பரோல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் அறையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் மீது பாகாயம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முருகனை ஆஜர்படுத்துவதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார், முருகனை கோர்ட்டுக்கு அழைத்து வந்திருந்தனர்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு அலீசியா அடுத்த மாதம் 9-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அதைத்தொடர்ந்து முருகன் மீண்டும் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

முன்னதாக கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்த முருகன் கோர்ட்டு வளாகத்தில் நீண்டநேரம் காத்திருந்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘எனது மகள் திருமணத்தை நான் நடத்தாமல் வேறு யார் நடத்துவார்கள். அதற்காக நளினி பரோல் கேட்டுள்ளார். அவருக்கு முதலில் பரோல் கிடைக்கட்டும். அவர் சென்று திருமண ஏற்பாடுகளை செய்யட்டும். அதன்பிறகு எனக்கும் பரோல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.
Tags:    

Similar News