மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாதிரி ஏவுகணை தயாரித்து பறக்க விட்ட மாணவிகள்
மேலூர்:
மேலூர் அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மான்ஷி, ஹரிப்பிரியா, சாருமதி, அட்சயா, சிபாயா, துளசிமணி, மதுமிதா, பரிதாபானு, கே.ஸ்வேதா, பி. ஸ்வேதா ஆகிய 10 மாணவிகள் அடங்கிய குழு, மாதிரி செயற்கை கோள் ஏவுகணையை (ராக்கெட்) வடிவமைத்தது.
ஒரு அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட மாதிரி “குட்டி ராக்கெட்டில்” திரவ எரிபொருள் நிரப்பப்பட்டு சிறிய ஏவுதளத்தில் பொருத்தப்பட்டது. மாணவிகள் தயாரித்த ராக்கெட் சிறிது தூரம் உயரே பறந்து சென்றது.
அப்போது கூடியிருந்த ஆசிரியர்களும், மாணவிகளும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இது குறித்து ஏவுகணை செயல்பாட்டின் வழிகாட்டி ஆசிரியர் சூரியகுமார் கூறுகையில், ராக்கெட்டை எந்த இயற்பியல் தத்துவத்தின் அடிப்படையில் மேல் நோக்கி பறக்கச் செய்ய முடியும்? என்ற அறிவியல் அறிவை இந்த நிகழ்வின் மூலம் மாணவிகள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
“எதிர்காலத்தில் இதைவிட பெரிதாக இன்னும் உயரமாக அதிக தூரத்தை கடந்து செல்லும் ராக்கெட்டை தயாரிப்போம்“ என்று மாணவிகள் உற்சாகமாக கூறினர்.
மாதிரி செயற்கைகோள் ஏவுகணை தயாரித்த மாணவிகளையும், வழிகாட்டி ஆசிரியரையும் தலைமை ஆசிரியை டெய்சி நிர்மலா ராணி பாராட்டினார்.