செய்திகள்

சசிகுமார் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் தேடும் பணி தீவிரம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை

Published On 2017-10-21 05:54 GMT   |   Update On 2017-10-21 05:54 GMT
கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கோவை:

இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக கடந்த 12-ந்தேதி கோவை தெற்கு உக்கடம் கோட்டை புதூரை சேர்ந்த சுபைர் (வயது 33) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாயின. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக் (37) தலைமறைவாக உள்ளார். அவருடன் மேலும் ஒருவருக்கும் இவ்வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து சுபைரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர். பின்னர் அவரை கோர்ட் அனுமதியுடன் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது சசிகுமார் கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியபாளையம் பகுதிக்கு சுபைரை நேரில் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது சசிகுமாரை கொன்றது குறித்து அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்னிலையில் நடித்துக் காட்டினார். அதனை போலீசார் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

மேலும், சசிகுமாரின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் குறித்தும் சுபைரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை உக்கடம் பைபாஸ் ரோட்டில் நாய்கள் கருத்தரிப்பு மையம் அருகே உள்ள வாய்க்காலில் வீசியதாக கூயிருந்தார்.

இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று காலை 10.30 மணியில் இருந்து உக்கடம் பைபாஸ் ரோட்டின் அருகே உள்ள கால்வாயில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆயுதங்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே 7 நாட்கள் விசாரணை முடிந்ததும் சுபைரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News