செய்திகள்

வாணியம்பாடியில் மின் இணைப்புக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

Published On 2017-10-20 07:55 GMT   |   Update On 2017-10-20 07:55 GMT
வாணியம்பாடியில் மின் இணைப்புக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார். மின்வாரிய அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாணியம்பாடி:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கோட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஷாகிப். இவர், புதியதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக, மின் இணைப்பு பெற, ஆலங்காயம் மின் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்துள்ளார்.

அப்போது, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலு, புதிய மின் இணைப்பு கட்டணம் உள்பட கூடுதலாக ரூ.6 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே புதிய மின் இணைப்பு வழங்கப்படும் என்று கூறினார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அப்துல் ஷாகிப், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், மின் வாரிய அதிகாரியை கையும் களவுமாக பிடிக்க திட்டம் தீட்டினர்.

அதன்படி, இன்று காலை ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரம் ரொக்கப் பணத்தை அப்துல் ஷாகிப்பிடம் கொடுத்து அனுப்பினர். அவர், ஆலங்காயம் மின்வாரிய அலுவகத்திற்கு ரசாயனம் தடவிய பணத்துடன் சென்றார்.

அலுவலகத்தில் அவரது அறையில் இருந்த அதிகாரி பாலுவிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட போது, அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக அதிகாரி பாலுவை பிடித்து கைது செய்தனர்.

மின்வாரிய அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News