செய்திகள்
காவேரிப்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து செல்லும் காட்சி.

வேலூர் மாவட்டத்தில் 146 ஏரிகள் முழு கொள்ளவை எட்டின

Published On 2017-10-19 06:30 GMT   |   Update On 2017-10-19 06:30 GMT
வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 1,271 ஏரிகளில் 146 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
வேலூர் :

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், தமிழக, ஆந்திர மாநில எல்லையில் பெய்த கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பின.

மோர்தானாவுக்கு 700 கன அடி ராஜா தோப்புக்கு 93.97 கன அடி, ஆண்டியப்பனூர் அணைக்கு 67.43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளவை எட்டியதால் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில், 62 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 32 ஏரிகளில் 75 சதவீதமும், 75 ஏரிகளில் 50 சதவீதமும், 350 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான தண்ணீர் நிரம்பியுள்ளது.

அதே போல், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் 752 ஏரிகள் உள்ளன. இவற்றில் 84ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. 68 ஏரிகளில் 75 சதவீதமும், 135 ஏரிகளில் 50 சதவீதமும், 211 ஏரிகளில் 25 சதவீதமும் 254 ஏரிகளில் நீர்வரத்து முழுமையாக இல்லை.

மாவட்டத்தில் உள்ள 1,271 ஏரிகளில் 146 ஏரிகள் முழுமையாக நிரம்பி யுள்ளன. தற்போது பாலாற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் ஏரிகளுக்கான வெள்ளம் குறைந்துள்ளது.

காவேரிப்பாக்கம் ஏரி 38.5 அடியை நேற்று எட்டியது. இதையடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி கூடுதல் நீரை வெளியேற்றுவதற்காக நேற்று முன்தினம் மாலை ஏரியின் மதகுகள் திறக்கப்பட்டன.

ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் சிறுவளையம், ரெட்டிவலம், உளியநல்லூர், ஜாகீர்தண்டலம், புன்னை, அசநெல்லிகுப்பம் உள்பட 55 ஏரிகளுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி, தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News