திருமங்கலத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு: அமைச்சர், கலெக்டர் ஆய்வு
பேரையூர்:
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அமைந்ததற்குப்பின்னால் திருமங்கலம் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கியமான பகுதியாக மாறி உள்ளது.
மதுரையிலிருந்து வரும் பஸ்கள் அனைத்தும் திருமங்கலத்தில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்வதால் திருமங்கலம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் திருமங்கலம் பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
வெளியூர் பஸ்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக திருமங்கலத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனால் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையும், திருமங்கலம் ராஜபாளையம் சாலையும் சந்திக்கும் இடத்தில் அரசுக்கு சொந்மான இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த இடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது வருவாய்த்துறை அதிகாரிகள் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.