செய்திகள்

கோவையில் தனியார் பஸ் மோதி பெண் வங்கி அதிகாரி பலி

Published On 2017-09-12 11:43 GMT   |   Update On 2017-09-12 11:43 GMT
கோவையில் இன்று காலை தந்தை கண் எதிரே தனியார் பஸ் மோதி பெண் வங்கி அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை:

சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணம் பாளையம் தாமோதர சாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சோமசுந்தரி(வயது 30).

இவர் பல்லடத்தில் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இன்று காலை சோமசுந்தரி வங்கிக்கு செல்வதற்காக சிங்கா நல்லூர் பஸ் நிலையத்துக்கு தனது தந்தை சங்கரனுடன் மொபட்டில் சென்றார். காமராஜர் சாலையில் சிங்காநல்லூர் போலீஸ் நிலையம் எதிர்புறம் சென்றபோது சாலையில் உள்ள பள்ளத்தில் மொபட் இறங்கவே மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த சோமசுந்தரி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது.

இதில் அவர் உடல் நசுங்கி சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த சங்கரன் கதறி அழுதார். விபத்து பற்றிய தகவலறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News