மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ.ரவிச்சந்திரன் தி.மு.க.வில் இணைந்தார்
சேலம்:
சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் 2-வது தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்த போது சிறிது காலம் ஒ.பன்னீர்செல்வம் அணியிலும், பின்னர் எடப்பாடி பழனிசாமி அணியிலும் இருந்தார். தறபோது கைத்தறி பிரிவு நிர்வாகியாக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த ரவிச்சந்திரன் வேறு கட்சிக்கு செல்வதாகவும் கூறப்பட்டது. அதனை உறுதி படுத்தும் வகையில் நேற்று அவர் சென்னைக்கு சென்றார்.
பின்னர் இன்று காலை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார். அவரை மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்று கட்சியில் இணைத்து கொண்டார்.
அப்போது வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.உடன் இருந்தார்.
பின்னர் தி.மு.க.வில் இணைந்தது குறித்து அவர் கூறியதாவது-
அ.தி.மு.க. சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு வருகிறது. இதனால் தான் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டேன். என்னை தொடர்ந்து மேலும் பலர் தி.மு.க.வுக்கு வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.