மெரினா கடற்கரையில் போலீஸ்காரரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் கைது
சென்னை:
மெரினா கடற்கரையில் இரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் மணலில் அமர்ந்து மது குடிப்பார்கள்.இவர்களை மிரட்டு வதற்கும், குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மெரினா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அகிலன் என்ற போலீஸ்காரர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். கடற்கரை மணலில் செல்லும் வாகனத்தில் சென்ற அவர் குடிசை மாற்று வாரிய அலுவலகம் எதிரில் உள்ள பகுதியில் 2 வாலிபர்கள் மணலில் அமர்ந்து மது குடிப்பதை பார்த்தார்.
அவர்களின் அருகில் சென்று கண்டித்த போலீஸ்காரர் அகிலன் 2 பேரையும் அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தார். போதையில் இருந்த இருவரும் அதனை கேட்காமல் அகிலனுடன் சண்டைபோட்டனர்.
வாலிபர்கள் இருவரும் போதையில் இருந்தனர். திடீரென அவர்களில் ஒருவர் போலீஸ்காரர் அகிலனின் முகத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் 6 இடங்களில் அவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அவர்களில் ஒருவரை பொது மக்கள் மடக்கி பிடித்தனர். அவரது பெயர் அரிராம். அண்ணாநகரை சேர்ந்த இவர் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தப்பிய அரிரமின் நண்பர் தினேசை போலீசார் தேடுகிறார்கள்.
இருவர் மீதும் கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் விசாரணை நடத்தி வருகிறார். கைதான மாணவர் அரிராம் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.