செய்திகள்

இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள மீதமுள்ள படகுகளையும் மீட்க வேண்டும்: மீனவர் சங்க தலைவர்

Published On 2017-08-21 04:43 GMT   |   Update On 2017-08-21 04:43 GMT
இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள மீதமுள்ள படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம்:

இலங்கை கடற்படையால் 2015-ம் ஆண்டு இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 42 விசைப் படகுகள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டன.

42 படகுகளையும் இந்தியா கொண்டு வர ராமநாதபுரம் மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் சமீரன் தலைமையில், மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா, மெக்கானிக், 3 அதிகாரிகள் உள்பட 7 பேர் கொண்ட குழுவினர் மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த 17-ந்தேதி புறப்பட்டு சென்றனர்.

அங்கு படகுகளை பார்வையிட்ட பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான விசைப் படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. அதை அழிக்கும் நோக்கத்தில் நீரில் மூழ்கடிக்கப்பட்டு படகுகள் மிகவும் சேதமடைந்து உள்ளன.

இலங்கை அரசு தற்போது விடுவிப்பதாக அறிவித்த 42 படகுகளில் 33 படகுகளின் மின் மோட்டார்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதமாகியுள்ளன. 9 படகுகள் சேதமடைந்துள்ளன.

பழுதான படகுகளை சரி செய்ய ரூ.3 முதல் 5 லட்சம் வரை செலவாகும். முற்றிலும் சேதமடைந்த படகுகளுக்கு பதில் அரசு மானியத்தில் படகுகள் வழங்க வேண்டும்.

மேலும் இலங்கை கடற்படையின் வசம் மீதம் உள்ள படகுகளை விரைவில் மீட்கவும், படகுகளை சரி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News