செய்திகள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் உள்பட 2 பேர் பலி

Published On 2017-08-18 05:30 GMT   |   Update On 2017-08-18 05:30 GMT
பருவநிலை மாற்றம் காரணமாக கோவை மாவட்டத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2½ மாதத்தில் இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர்.
கோவை:

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 26). என்பவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களாக சந்தோஷ்குமார் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது ரத்தத்தை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சந்தோஷ்குமாருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து சந்தோஷ்குமார் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சந்தோஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதே போல கோவை டாட்டாபாத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜெயபிரியா (32). இவர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஜெயபிரியா நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

இதனால் கோவை மாவட்டத்தில் கடந்த 2½ மாதத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 50 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 122 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகர பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 400-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News