செய்திகள்

கோவை, திருப்பூர், நீலகிரியில் சுதந்திர தின விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2017-08-14 06:15 GMT   |   Update On 2017-08-14 06:15 GMT
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை:

சுதந்திர தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தேசிய கொடியேற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

விழா நடைபெறும் மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. மைதானத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை செய்தனர். மோப்ப நாய் மூலம் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா? என்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர நகரம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள், பூங்காக்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. தண்டவாளங்களில் போலீசார் ரோந்து சென்றனர்.

கோவை வழியாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது நடமாடுகிறார்களா? என கண்காணிப்பு காமிராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர். விமான நிலையத்திற்குள் செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றி மாநகர போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகரை சுற்றி உள்ள 14 சோதனை சாவடிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 25 சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. மாவட்டத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மொபைல் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

லாட்ஜ்களில் சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கியிருக்கிறார்களா? என்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகர பகுதியில் 2 ஆயிரம் போலீசார், புறநகரில் 1000 போலீசார் என மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் பழனிசாமி தேசிய கொடியேற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மாநகர போலீஸ் கமி‌ஷனர் நாகராஜன் உத்தரவின்பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டி அரசு கலைகல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News