செய்திகள்
விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பல்லடத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை நடக்கிறது: முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்பு

Published On 2017-07-21 06:03 GMT   |   Update On 2017-07-21 06:03 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூரில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

விழாவில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளிடையே கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

விழாவில் கலந்து கொள்வதற்காக முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை சென்னையில் இருந்து விமான மூலம் 10.50 மணிக்கு கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் கார் மூலம் பல்லடம் செல்கிறார்.

இவ்விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூரில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு வருகை தர உள்ளார். இவ்விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி முன்கூட்டியே மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழக் கூடிய வகையில் கல்வியில் மாபெரும் மாற்றங்களை செய்து பாடத்திட்டங்களை மாற்றியமைத்து நல்ல கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் காண செய்து வரும் தமிழக அரசின் அரசு விழாவினை சிறக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்கும் இந்நூற்றாண்டு விழா மதுரையில் தொடங்கப்பட்டதை தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் முதன்மையாக திருப்பூரில் நடைபெறவுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு மேற்கோள் காட்டும் அளவிற்கு இவ்விழா வெகு சிறப்பாக நடந்தேற உள்ளது. இவ்விழாவை சிறக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறும் அறிவுரைகளை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு நடந்தேற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News