உத்தமபாளையம் அருகே 1½ வயது குழந்தை மர்ம பலி
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகில் உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவரது 1½ குழந்தை கிஷோர். நேற்று வீட்டில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான். உணர்ச்சியற்ற நிலையில் கிடந்த தனது குழந்தையை பார்த்து சிவமூர்த்தியும் அவரது மனைவியும் குழந்தையை தூக்கிக்கொண்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் அது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சிவமூர்த்தி இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில் எனது குழந்தையின் சாவுக்கு அதே பகுதியை சேர்ந்த உறவினர்தான் காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் குழந்தையின் உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறினார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்துவதாக உறுதி அளித்ததின் பேரில் குழந்தையை வாங்கி சென்றனர். குழந்தை எவ்வாறு இறந்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.