செய்திகள்

கோவை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: டீ மாஸ்டர் கைது

Published On 2017-06-26 04:58 GMT   |   Update On 2017-06-26 04:58 GMT
கோவை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீ மாஸ்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ்(வயது 25).

இவர் கடந்த 2 வருடங்களாக கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலேரிபாளையத்தில் பேக்கரி ஒன்றில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு பக்கத்து வீட்டில் வசிக்கும் 5 வயது சிறுமியிடம் நைசாக பேசி தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு சின்ராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதற்கிடையே சிறுமியை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களிலும் தேடிச்சென்றனர். அப்போது சின்ராஜின் வீட்டில் இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டது. உடனே சிறுமியின் தந்தை அங்கு ஓடிச் சென்றார். அவரை பார்த்ததும் சின்ராஜ் தப்பி ஓடினார். பின்னர் சிறுமியை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சின்ராஜ் மீது பெண்குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி சின்ராஜை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News