புதுச்சேரி

அரசு ஆஸ்பத்திரியில் வெப்பத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு

Published On 2024-05-07 04:39 GMT   |   Update On 2024-05-07 04:39 GMT
  • வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்ப அயர்ச்சி (ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
  • காரைக்கால் பகுதிகளில் இதுவரை மது போதையில் வெயில் மயக்கத்துடன் 6 பேர் சுருண்டு விழுந்து பலியாகி உள்ளனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி முழுவதும் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது.

புதுச்சேரியில் நேற்று 96.1 டிகிரி வெயில் பதிவானது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகிற 10-ந் தேதி வரை 96.8 டிகிரி முதல் 100 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்ப அயர்ச்சி (ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து நேரலாம்.

இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள பகல் நேரங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

புதுவை, காரைக்கால் பகுதிகளில் இதுவரை மது போதையில் வெயில் மயக்கத்துடன் 6 பேர் சுருண்டு விழுந்து பலியாகி உள்ளனர்.

புதுவையில் வெயிலின் தாக்கத்தில் மயக்கம் அடைப வர்களுக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிகளில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தற்போது கதிர் காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 5 படுக்கைகள் கொண்ட வார்டும், ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட வார்டும், அரசு பொது மருத்துவமனையில் 2 படுக்கைகள் கொண்ட வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. போதுமான மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அங்கு பணியில் இருப்பார்கள்.

வெப்ப அயர்ச்சியால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்களை சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News