#DMKCongress புதுச்சேரியில் தி.மு.க.வுக்கு ஆட்சியில் பங்கு இல்லை - கிரீஷ் சோடங்கர்
- தமிழகத்தில் தி.மு.க.வும், புதுச்சேரியில் காங்கிரசும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்.
- கூட்டணி என்பதன் அர்த்தம் தியாகம்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கட்சி தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி காங்கிரசாருடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரசில் மாநிலத்தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் முன்னாள் எம்.எல்.எ. அனந்தராமன், மூத்த துறை தலைவர் தேவதாஸ் ஆகியோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம்.
தமிழகத்தில் தி.மு.க.வும், புதுச்சேரியில் காங்கிரசும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தைக்குழு தி.மு.க.வுடன் பேசி யாருக்கு எத்தனை தொகுதிகள் என முடிவு எடுப்பார்கள். தமிழக பார்முலாதான் புதுச்சேரியில் பின்பற்றப்படும்.
கூட்டணி என்பதன் அர்த்தம் தியாகம். இது கூட்டணியிலுள்ள அனைத்துக்கட்சிக்கும் பொருந்தும். தியாகம் இல்லாவிட்டால் கூட்டணி இல்லை. கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகள் கேட்பார்கள். அதனை பேசி தீர்வு காண்போம். கூட்டணி பேச்சுவார்த்தையில் தமிழக வழிமுறையையே புதுச்சேரியில் கையாள்வோம்.
புதுச்சேரி, தமிழகமும் வெவ்வேறு மாநிலங்கள், பேச்சுவார்த்தை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் புதுச்சேரியில் நடைபெறும். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்.
இவ்வாறு கிரீஷ் சோடங்கர் கூறினார்.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, 2 ராஜ்யசபா சீட், 41 தொகுதிகள் என கேட்ட காங்கிரசுக்கு 28 தொகுதி, ஒரு ராஜ்யசபா மட்டுமே தி.மு.க. அளித்துள்ளது. ஆட்சியில் பங்கு இல்லை என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சுட்டி காட்டியயே காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரீஷ் சோடங்கர் கூறியுள்ளார். இதன் மூலம் புதுச்சேரியில் ஆட்சியில் தி.மு.க.வுக்கு பங்கு இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்.
புதுச்சேரியில் 6 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்கட்சி அந்தஸ்தில் உள்ள தி.மு.க. கடந்த தேர்தலில் 13 தொகுதியில் போட்டியிட்டது. கால் நூற்றாண்டுகளாக புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலோ, தி.மு.க. பங்கேற்ற ஆட்சியோ இல்லை.
இதனால் இந்த முறை தனது தலைமையில் கூட்டணி ஆட்சி என புதுச்சேரி தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு முட்டுகட்டை போடும் வகையிலேயே கிரீஷ் சோடங்கர் கூறியுள்ளார். எனவே, கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுமா என்பது கேள்வி குறியாகி உள்ளது.