புதுச்சேரி

தமிழகத்தில் தொகுதிகள் குறைந்ததால் புதுச்சேரியில் கூடுதல் 'சீட்' கேட்க காங்கிரஸ் முடிவு

Published On 2026-03-05 12:44 IST   |   Update On 2026-03-05 12:44:00 IST
  • குறைந்த பட்சம் 20 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது.
  • கூட்டணிக்கு தலைமை யார்? என்பதில் இன்னும் போட்டி தொடர்கிறது.

புதுச்சேரி:

சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியில் தமிழகத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு தி.மு.க.- காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த முறை 41 தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட், அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் பிடிவாதம் பிடித்தது. இதனால் பேச்சுவார்த்தை நடைபெறாமல், காலதாமதமாகி வந்தது.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின்படி ப.சிதம்பரம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதையடுத்து 28 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் என தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.

தமிழகத்தில் தாங்கள் கேட்ட தொகுதிகளை விட எண்ணிக்கை குறைந்துள்ளதால் புதுச்சேரியில் கடந்த முறையை விட கூடுதலான தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியிலும் காங்கிரஸ், தி.மு.க. இடையே கூட்டணிக்கு யார்? தலைமை, கூடுதல் தொகுதியில் போட்டி என்ற மோதல் இருந்து வருகிறது.

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு இல்லை என்ற நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. குறைந்த பட்சம் 20 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது.

இதுதொடர்பாக ஏற்கனவே கட்சி தலைமைக்கும் புதுச்சேரி காங்கிரசார் தொகுதி பட்டியலுடன் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கு தலைமை தாங்குவதை விரும்பவில்லை.

இதனை புதுச்சேரி மாநில தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெகத்ரட்சகன் எம்.பி.யை சந்தித்து தெரிவித்துள்ளனர். அதோடு தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியலையும் அளித்துள்ளனர். இதனால் கூட்டணிக்கு தலைமை யார்? என்பதில் இன்னும் போட்டி தொடர்கிறது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் தெலுங்கானா மந்திரி இல்ல திருமண விழாவில் பங்கேற்க ஐதராபாத் சென்றுள்ளனர். அவர்கள் இன்று மாலை சென்னை திரும்புகின்றனர்.

அகில இந்திய தலைமை அறிவுறுத்தினால் சென்னையில் அண்ணா அறிவாலயம் சென்று புதுச்சேரிக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று மாலை தொடங்குவார்கள். புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா இன்று சென்னையில் தி.மு.க. தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 15, தி.மு.க. 13, இந்திய கம்யூனிஸ்டு 1, விடுதலை சிறுத்தைகள் 1 என தொகுதி பங்கீடு செய்து போட்டியிட்டது.

இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் புதுச்சேரியில் தங்களுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புதுச்சேரியில் ஒரு பொது, 2 தனி என 3 தொகுதிகள் வேண்டும் என தி.மு.க. தலைமையிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் வருகிற சட்டசபை தேர்தலில் தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளும் மாறும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

Tags:    

Similar News