புதுச்சேரி

போலீஸ் அதிகாரி போல் பேசி தொழிலதிபரிடம் ரூ.15 லட்சம் பறிப்பு - மோசடி கும்பல் கைவரிசை

Published On 2026-03-06 13:53 IST   |   Update On 2026-03-06 13:53:00 IST
  • உங்கள் மகன் பெண் பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
  • சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுச்சேரி முதலியார் பேட்டையை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், தன்னை போலீஸ் அதிகாரி எனக்கூறியுள்ளார்.

மேலும் உங்கள் மகன் பெண் பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடுமே என எண்ணி தங்கள் மகனை விடுவிக்க வேண்டுமாறு கூறியுள்ளனர்.

அப்போது வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதை நம்பிய பெற்றோர், அவர் கூறிய எண்ணுக்கு ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சத்தை அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுபற்றி விசாரித்தபோது, பலாத்கார வழக்கில் மகன் கைது செய்யப்படவில்லை என்பதும் மர்மநபர் போலீஸ்போல் பேசி மோசடி செய்தது தெரியவந்தது.

இதேபோல் முத்தியால் பேட்டையை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி அவரின் மகனும் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளதாகவும் அவரை விடுவிக்க ரூ.5 லட்சத்தை கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டி பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News