புதுச்சேரி

தொகுதி பங்கீடு குறித்து புதுவை காங்கிரசாருடன் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை

Published On 2026-03-06 14:46 IST   |   Update On 2026-03-06 14:46:00 IST
  • கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்ற தி.மு.க. புதுவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளது.
  • தமிழகத்தை விட தொகுதி பங்கீட்டில் புதுவையில் இடியாப்ப சிக்கல் நிலவுகிறது.

புதுச்சேரி:

தமிழகத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி முடிவாகியுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் கேட்ட கூடுதலான தொகுதிகள், ஆட்சியில் பங்கு, 2 ராஜ்யசபா சீட் ஆகியவை கிடைக்கவில்லை. 28 தொகுதிகளை காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கியுள்ளது.

அடுத்தகட்டமாக புதுவைக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. புதுவையில் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்ற மோதல் காங்கிரஸ், தி.மு.க. இடையில் உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்ற தி.மு.க. புதுவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளது. அதோடு, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 14 தொகுதிகளில் பணியாற்றி கூடுதலான வாக்குகளையும் காங்கிரசுக்கு பெற்று தந்தது.

இதனால் கூட்டணிக்கு தலைமை தாங்குவதோடு, அதிக தொகுதிகளையும் பெற தி.மு.க. ஆர்வம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும் என்பதில் புதுவை காங்கிரசார் உறுதியாக உள்ளனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியும், 29 தொகுதிகளில் காங்கிரசுக்கு கிடைத்த கூடுதல் வாக்குகளும் புதுவை காங்கிரசாருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அவர்கள் பழைய பார்முலா படி காங்கிரசுக்கு 20: தி.மு.க.வுக்கு 10 என்ற நிலையை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் காங்கிரஸ் தலைமையை விட, தி.மு.க. தலைமையை எதிர்பார்க்கின்றனர்.

இதனால் தமிழகத்தை விட தொகுதி பங்கீட்டில் புதுவையில் இடியாப்ப சிக்கல் நிலவுகிறது. இந்த நிலையில் புதுவை காங்கிரசாருடன் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், கூடுதல் பொறுப்பாளர் அஞ்சலி நிமல்கர் ஆகியோர் இன்று காலை ஆலோசனை நடத்தினர்.

புதுவை காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் பெத்தபெருமாள், கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பாலன், கார்த்திகேயன், சீனியர் துணை தலைவர் தேவதாஸ், பொதுசெயலாளர் ரத்னா ரமேஷ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், மகிளா காங்கிரஸ் தலைவி நிஷா, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ஜெயபால், மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்சவர்தன் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது நிர்வாகிகள் தரப்பில், கடந்த தேர்தல் நெருக்கத்தில் காங்கிரசிலிருந்து பலர் வெளியேறினர். இதனால் கட்சியில் நெருக்கடி ஏற்பட்டது. காங்கிரஸ் தொகுதிகளைக்கூட திமுகவுக்கு விட்டுக்கொடுத்தோம். ஆனால் தற்போது ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். இதனால் வெற்றி சாதகமாக உள்ளது.

இதனால் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் பெற்றதை போல 21 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை விட்டுத் தரக்கூடாது என வலியுறுத்தினர்.

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்ட மேலிட பொறுப்பாளர் கட்சி தலைமைக்கு தகவல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே கிரீஷ் சோடங்கர் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக தி.மு.க. தலைமை கூறியுள்ளது. இதனால் புதுவை தி.மு.க. நேரடியாக மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தாது என கூறப்படுகிறது.

இதனால் புதுவை தொகுதி பங்கீடையும் தி.மு.க.வின் தலைமையே பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிகிறது.

Tags:    

Similar News