புதுவை அருகே நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: 2 பேர் பலி
காலாப்பட்டு:
சென்னை கொருக்குப்பேட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வினோத் (வயது29). இவர், அங்குள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்களான முத்துக்குமார் (38), சதீஷ் (25) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று புதுவை வந்தனர்.
புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு இரவு சென்னை புறப்பட்டனர். அப்போது 3 பேரும் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்தனர்.
மேலும் மது பாட்டில்களை வாங்கி ஒரு பையில் எடுத்து சென்றனர். நள்ளிரவு 11.30 மணியளவில் இவர்கள் புதுவையை அடுத்த தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு சோதனை சாவடி அருகே வந்த போது, அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்ததை கண்டனர்.
இதனால் போலீசுக்கு பயந்து மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி சென்றனர். அனிச்சங்குப்பம் என்ற இடத்தில் சென்ற போது, அங்கு நின்று கொண்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் அதிவேகமாக மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே வினோத்தும், முத்துக்குமாரும் உடல் நசுங்கி பலியானார்கள். சதீஷ் படுகாயம் அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சதீஷை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து போன 2 பேர் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.