செய்திகள்

தேனி அருகே வாலிபர் கொலை: துண்டித்த தலையுடன் ஊருக்குள் சுற்றிய கொலையாளி

Published On 2017-04-29 10:33 GMT   |   Update On 2017-04-29 10:33 GMT
தேனி அருகே வாலிபரை கொன்று அவரது தலையுடன் ஊருக்குள் சுற்றிய கொலையாளியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி:

தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள டி.மீனாட்சிபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் சக்திவேல் (28). இவருக்கு திருமணம் ஆகி விட்டது. ஆனால் அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக சக்திவேலை விட்டு பிரிந்து தற்போது கேரளாவில் வசித்து வருகிறார்.

இதனால் சக்திவேல் அதே பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு சக்திவேல் தனது நண்பரான கிருஷ்ணன் என்பவரை அழைத்து தோட்டத்தில் மது அருந்தினார்.

பின்னர் அங்கேயே கறி சமைத்து சாப்பிட்டனர். அப்போது அங்கு வந்த செல்லத்துரை (64) என்பவரும் அவர்களுடன் மது குடித்தார். சிறிது நேரம் சென்றபிறகு சக்திவேல் தனது செல்போனை தேடினார். அதனை செல்லத்துரை தனது பாக்கெட்டில் வைத்திருந்ததை பார்த்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் இந்த வயதில் செல்போன் திருடுகிறாயே? வெட்கமாக இல்லையா? என்று திட்டினார். மேலும் செல்போனை பறித்துக்கொண்டு அவரை அங்கிருந்து அனுப்பி விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்லத்துரை சக்திவேலின் தந்தை பழனிச்சாமியிடம் சென்று உன் மகன் என்னை திருடன் என்று திட்டி விட்டான். அவனை கொல்லாமல் விடமாட்டேன் என்று சத்தம்போட்டு சென்று விட்டார்.

அதன்பிறகு தோட்டத்தில் தூங்கிக்கொண்டிருந்த சக்திவேலை அரிவாளால் தலையை துண்டாக வெட்டினார். அந்த தலையை ஒரு பையில் போட்டுக் கொண்டு கிருஷ்ணனிடம் வந்தார். உன் நண்பன் என்னை திருடன் என்று திட்டினான். இப்போது அவன் தலையை வெட்டி விட்டேன் பார்த்தாயா? என்று காட்டினார்.

பின்னர் வெட்டிய தலையுடன் ஊருக்குள் சுற்றி வந்தார். தனது மகன் கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் பழனிச்சாமி தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வெட்டப்பட்ட உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செல்லத்துரை யையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News