செய்திகள்

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய ஆயுள் கைதி சிக்கினார்

Published On 2017-04-24 06:49 GMT   |   Update On 2017-04-24 06:49 GMT
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது தப்பி ஓடினார். கூடுவாஞ்சேரியில் பதுங்கி இருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

திருவொற்றியூர் சாத்துமா நகரை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன். இவர் அதே பகுதியை சேர்ந்த பேபியம்மாள் நடத்தி வந்த தனியார் பள்ளியில் டிரைவராக இருந்தார்.

சம்பள பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் பேபியம்மாளை கோட்டீஸ்வரன் கொலை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

பார்வை குறைபாடால் அவதிப்பட்ட கோட்டீஸ்வரன் உள்பட 10 கைதிகளை நேற்று முன் தினம் போலீசார் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அப்போது கோட்டீஸ்வரன் மட்டும் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கடந்த 2 நாட்களாக தப்பி ஓடிய கோட்டீஸ்வரனை தேடி வந்தனர். இது கைதிகளை அழைத்து வந்த போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கைதி கோட்டீஸ்வரன் கூடுவாஞ்சேரியில் உள்ள அக்காள் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய உடனேயே கோட்டீஸ்வரன் கூடுவாஞ்சேரியில் உள்ள அக்காள் வீட்டுக்கு செல்ல முடிவு செய்து உள்ளார்.

ஆனால் கையில் பணம் இல்லாததால் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள தர்காவில் பிச்சை எடுத்து பணம் சேர்த்து இருக்கிறார்.

ஒருநாள் முழுவதும் அவர் அங்கேயே பிச்சை எடுத்தது போலீசாருக்கு தெரியவில்லை. அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வேறு கோணத்தில் தேடி வந்து உள்ளனர்.

போலீசார் கண்டு கொள்ளாததால் ஓரளவு பணம் சேர்ந்ததும் பஸ்சில் ஏறி கூடுவாஞ்சேரிக்கு சென்று இருக்கிறார். இதன் பின்னரே கோட்டீஸ்வரனை போலீசார் கைது செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

Similar News