செய்திகள்
மாணவர்கள் மீது தாக்குதல்; சாலை மறியலில் ஈடுபட்ட திருமாவளவன், ஜி.ராமகிருஷ்னன் கைது
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் நடத்தியதை கண்டித்து இன்று சாலை மறியலில் ஈடுபட்ட தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை;
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து மக்கள் நல கூட்டியக்க தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன் ஆகியோர் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் தடுத்து மறிப்பார்கள் என அறிந்து 3 பேரும் ஒரே காரில் கடற்கரை சாலை நோக்கி சென்றனர். கடற்கரை சாலைக்கு எந்த வாகனங்களையும் செல்ல விடாமல் போலீசார் தடுப்பு அமைத்து மறித்து இருந்தனர்.
மாணவர்களை பார்ப்பதற்காக ராதா கிருஷ்ணன் சாலை வழியாக சென்ற அவர்களது காரை போலீசார் தடுத்து மறித்தார்கள். இதையடுத்து ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் ஆகிய 3 பேரும் சென்னை மயிலாப்பூரில் உள்ள மியூசிக் அகாடமி அருகில் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்,இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக காவல்துறை தாக்கியதை கண்டித்து அவர்கள் கோஷமிட்டார்கள்.
போக்குவரத்து நெரிசலுக்கு இடையே 3 தலைவர் களும் தொண்டர்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்த சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், மாலை 5 மணி அளவில் தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.