செய்திகள்

நாளை தமிழகம் முழுவதும் திமுக ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடும்:ஸ்டாலின்

Published On 2017-01-19 13:59 GMT   |   Update On 2017-01-19 13:59 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை திமுக கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவர் என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இளைஞர்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக டெல்லி சென்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார். எனினும் இந்த சந்திப்பின் மூலம் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.அவசர சட்டம் இயற்றப்படாத வரையில் தங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இதனால் தமிழகத்தில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை திமுக கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவர் என திமுக கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில் "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்ற மாநில அரசை வலியுறுத்தியும், தமிழக உரிமைகளை நசுக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும் நாளை தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தில் திமுக கட்சியினர் ஈடுபடுவர்" என தெரிவித்துள்ளார்.

Similar News