செய்திகள்

திருமங்கலம் அருகே குடிக்க பணம் கொடுக்காததால் தந்தை அடித்துக்கொலை: விவசாயி கைது

Published On 2016-12-02 05:01 GMT   |   Update On 2016-12-02 05:02 GMT
குடிக்க பணம் கொடுக்காததால் தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டார். விவசாயியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்பக்குண்டு மேற்கு தெருவைச் சேர்ந்தவர் நைஸ் கருத்தகண்ணன் (வயது75). இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். மனைவி கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்த நைஸ் கருத்தகண்ணன் வட்டி தொழில் செய்து வந்தார்.

இவரது 4-வது மகன் சுப்பிரமணி (45). இவர் விவசாயம் செய்து வருகிறார். குடி பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி தந்தை நைஸ் கருத்தகண்ணனிடம் பணம் வாங்கி குடித்து வந்தார். நேற்று இரவும் குடிக்க பணம் கேட்டுள்ளார்.

அப்போது கருத்தகண்ணன் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் தந்தை- மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி, வீட்டில் கிடந்த கம்பால் தந்தையை தாக்கினார். தலையில் அடிப்பட்ட நைஸ் கருத்த கண்ணன் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து பலியானார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரம்யா சிந்துபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News