செய்திகள்
ரகானே

முதல் டெஸ்ட்: ரகானேவை கேப்டனாக நியமித்தது தவறு - இந்திய அணியின் முன்னாள் வீரர் சொல்கிறார்

Published On 2021-11-14 08:19 GMT   |   Update On 2021-11-14 08:19 GMT
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரோகித் சர்மாவையே கேப்டனாக நியமித்து இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

புதுடெல்லி:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடியது.

இந்த தொடருக்கான இந்திய அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் 20 ஓவர் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கோலி 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதோடு மட்டுமல்லாமல் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரிலும் விளையாடவில்லை. மேலும் முதல் டெஸ்ட் போட்டியிலும் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

2-வது டெஸ்டில் விராட் கோலி இந்திய அணியுடன் இணைந்து கேப்டனாக பணியாற்றுவார். முதல் டெஸ்ட் போட்டிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் ரகானேவை கேப்டனாக நியமித்த தேர்வுக் குழுவின் முடிவு தொடர்பாக முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.

ரகானேவை கேப்டனாக நியமித்தது தவறு. இது சரியான முடிவு அல்ல. இந்த தேர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக அவரது சராசரி சிறப்பாக இல்லை.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தனது பேட்டிங் திறனை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். இதனால் அவருக்கு நெருக்கடி இருக்கிறது. மேலும் கேப்டன் பதவியில் அவருக்கு கூடுதல் நெருக்கடிதான் ஏற்படும்.

ரோகித் சர்மாவையே கேப்டனாக நியமித்து இருக்க வேண்டும். அவருக்கு ஓய்வு கொடுத்தது சரியல்ல.

இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறினார்.

Tags:    

Similar News