செய்திகள்
ரிஷப் பந்த், சகா, தீப் தாஸ்குப்தா

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் சகாவை விக்கெட் கீப்பராக களம் இறக்க வேண்டும்: தீப் தாஸ்குப்தா

Published On 2019-09-24 15:45 GMT   |   Update On 2019-09-24 15:45 GMT
தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் சகாவை விக்கெட் கீப்பராக களம் இறக்க வேண்டும் என தீப் தாஸ்குப்தா வலியுறுத்தியுள்ளார்.
டோனிக்குப் பிறகு ரிஷப் பந்துதான் இந்திய அணியின் நீண்ட கால விக்கெட் கீப்பராக வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார்.

மேலும் அவருக்கு பிடித்தமான ஷாட்களில்தான் அடிக்கடி ஆட்டமிழந்து வருகிறார். என்றாலும் தொடர்ந்து அவர் 4-வது இடத்தில் களம் இறக்கப்படுகிறார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் சொதப்பியதால், சஞ்சு சாம்சனை ஏன் தேர்வு செய்யக்கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்துக்குப் பதில் சகாவை களம் இறக்க வேண்டும் என தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தாஸ் குப்தா கூறுகையில் ‘‘காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு, சகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போதைய நிலையில் உலகளவில் சிறந்த கீப்பர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஒரே கேள்வி என்னவென்றால், குறிப்பாக இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடும்போது சகா சிறந்த பேட்ஸ்மேனா? என்பதுதான்.

காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு, பேட்டிங் செய்த ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். இந்திய ‘ஏ’ அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ரிஷப் பந்தை விட விருத்திமான் சகா சிறந்த பேட்ஸ்மேனா? என்று கேட்கலாம். ஒருவேளை ரிஷப் பந்த் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கலாம். ஆனால், டெஸ்ட் போட்டியை பொறுத்தவரைக்கும் சிறந்த பேட்ஸ்மேனா? அல்லது சிறந்த விக்கெட் கீப்பரா? என்ற கேள்விதான் முதன்மையாக எழும்பும்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பந்தின் விக்கெட் கீப்பர் பணி கவலையளிக்கும் வகையில் இருந்தது. இந்திய கண்டிசனில் நான் சாகவைத்தான் தேர்வு செய்வேன்’’ என்றார்.
Tags:    

Similar News