செய்திகள்

2-வது முறையாக 150 ரன்கள் குவித்து ரோகித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி சாதனை

Published On 2018-06-28 00:27 GMT   |   Update On 2018-06-28 00:29 GMT
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது முறையாக 150க்கும் அதிகமான ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளனர். #RohitSharma #ShikharDhawan #IREvIND #INDvIRE

அயர்லாந்து சென்று இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - ஷிகர் தவான் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் கடந்தனர்.

இந்த ஜோடி 16 ஓவர்கள் தாக்குபிடித்து விளையாடி 160 ரன்கள் குவித்தது. தவான் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா கடைசி ஓவரில் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவரது 17-வது அரைசதமாகும். விராட் கோலி 18 அரைசதங்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.



சர்வதேச டி20 போட்டிகளில் தவான் - ரோகித் ஜோடி 150க்கும் அதிகமாக ரன்கள் அடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதன்மூலம் இந்த சாதனையை படைத்த முதல் ஜோடி என்ற சாதனையை இருவரும் படைத்துள்ளனர். முன்னதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்த ஜோடி 158 ரன்கள் குவித்திருந்தது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் உடன் இணைந்து 165 ரன்கள் எடுத்ததே ஒரு இந்திய கிரிக்கெட் ஜோடி அதிகபட்ச ஸ்கோராகும்.

இந்திய அணி இதுவரை 13 முறை சர்வதேச டி20 போட்டிகளில் 100 ரன்களுக்கும் அதிகமான பாட்னர்ஷிப் ரன்களை எடுத்துள்ளது. இந்த ஜோடியில் 7 முறை ரோகித் சர்மா இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #RohitSharma #ShikharDhawan #IREvIND #INDvIRE
Tags:    

Similar News