செய்திகள்
உலகக் கோப்பை கால்பந்து - ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டி டிரா
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #WorldCup2018 #JAPSEN
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எச் பிரிவில் இடம் பிடித்துள்ள ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் மோதின.
போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் செனகல் அணியின் சாடியோ மானே ஒரு கோல் அடித்தார்.
இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டகாஷி இனுல் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-1 என சமனிலை வகித்தன.
இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 71-வது நிமிடத்தில் செனகல் அணியின் மூசா வேக் ஒரு கோல் அடிக்க 2-1 என முன்னிலை பெற்றது.
ஆனால், ஜப்பான் அணியினர் அடுத்த சில நிமிடங்களில், அதாவது 78-வது நிமிடத்தில் கைசுகே ஹோண்டா ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமனிலை பெற்றது. அதன்பின், ஆட்டம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
கூடுதலாக கிடைத்த நிமிடங்களிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளன.