செய்திகள்
ஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 133 ரன்களை இலக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயித்துள்ளது. #VIVOIPL #SRHvKXIP #SunrisersHyderabad #KingsXIPunjab
பெங்களூரு:
ஐபிஎல் தொடரின் இன்றைய 25-வது ஆட்டம் ஐதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கியது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதற்கான டாஸ் போடப்பட்டதில் பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஷிகர் தவான், கேன் வில்லியம்சன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அன்கித் ராஜ்பூட் வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்தில் டக் அவுட் ஆனார்.
அதன்பின் வந்த விரிதிமான் சஹா 6 ரன்னிலும், தவான் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். முதல் மூன்று விக்கெட்களையும் அன்கித் ராஜ்பூட் வீழ்த்தினார். அப்போது ஐதராபாத் அணி 27 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அதன்பின் மணிஷ் பாண்டே, ஷகிப் அல் ஹசன் இருவரும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். ஷகிப் அல் ஹசன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் யூசுப் பதான் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய மணிஷ் பாண்டே அரைசதம் கடந்தார். அவர் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அன்கித் ராஜ்பூட் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தார். பஞ்சாப் அணி பந்துவீச்சில் அன்கித் ராஜ்பூட் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதன்மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 133 ரன்களை இலக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயித்துள்ளது. #VIVOIPL #SRHvKXIP #SunrisersHyderabad #KingsXIPunjab