செய்திகள்

பெண்கள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது போட்டியிலும் இந்தியா தோல்வி

Published On 2018-03-18 11:30 GMT   |   Update On 2018-03-18 11:30 GMT
பெண்கள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. #INDWvAUSW
இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வதோதராவில் நடைபெற்று வந்தது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி நிக்கல் போல்டன், விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள்.



போல்டன் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் அலிசா ஹீலி நிலைத்து நின்று விளையாடி 115 பந்தில் 17 பவுண்டரி, 2 சிக்சருடன் 133 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது சதத்தால் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்தது. இந்திய வீராங்கனைகள் 8 பேர் பந்து வீசினார்கள்.

பின்னர் 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினார்கள். தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 41 பந்தில் 42 ரன்களும், ஸ்மிரித் மந்தனா 42 பந்தில் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



அதன்பின் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா 44.4 ஓவரில் 235 ரன்னில் ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலியா 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா பெண்கள் அணி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது. #INDWvAUSW #SportsNews
Tags:    

Similar News