செய்திகள்

ஹர்பஜன்சிங்கிடம் மன்னிப்பு கேட்டார், சவுரவ் கங்குலி

Published On 2017-11-22 05:01 GMT   |   Update On 2017-11-22 05:01 GMT
குழந்தையின் பாலினத்தை தவறாக கூறியதால் ஹர்பஜன்சிங்கிடம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மன்னிப்பு கேட்டார்.
கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், தனது மனைவி கீதா பஸ்ரா, மகள் ஹினாயா ஆகியோருடன் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் வழிபட்டு, அந்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார். அந்த படத்துக்கு வரவேற்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்ட இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ‘உங்களது மகன் அழகாக இருக்கிறான் ஹர்பஜன், அவன் மீது நிறைய அன்பு செலுத்துங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஹர்பஜன்-கீதா பஸ்ரா தம்பதிக்கு என்ன குழந்தை பிறந்தது என்பது கூட தெரியாமல் கங்குலி கருத்து வெளியிட்டுள்ளாரே? என்று சிலர் விமர்சிக்க தொடங்கினர். தனது தவறை புரிந்து கொண்ட கங்குலி, உடனடியாக மறுபதிவிட்டு விளக்கம் அளித்தார். “மன்னித்து கொள்ளுங்கள் ஹர்பஜன்சிங். உங்களது மகள் அழகாக இருக்கிறாள். எனக்கு வயதாகி விட்டது அல்லவா?” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு ஹர்பஜன்சிங், ‘உங்களது ஆசீர்வாதத்துக்கு நன்றி... விரைவில் சந்திக்கிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.
Tags:    

Similar News