செய்திகள்

20 ஓவர் போட்டி: பாகிஸ்தானில் விளையாட இலங்கை அணி ஒப்புதல்

Published On 2017-10-17 09:29 GMT   |   Update On 2017-10-17 09:29 GMT
லாகூரில் பாகிஸ்தானுடன் இருபது ஓவர் போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணி ஒப்புக் கொண்டுள்ளது.
இலங்கை அணி 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது அந்த அணி வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களால் அந்நாட்டுக்கு எந்த அணிகளும் சென்று விளையாட மறுத்து வருகின்றன. இதனால் அந்த அணி சொந்த மண்ணுக்கு பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்சில் விளையாடி வருகிறது.

தற்போது பாகிஸ்தான் - இலங்கை இடையேயான தொடர் அங்கு தான் நடந்து வருகிறது. மூன்று 20 ஓவர் போட்டியில் கடைசி ஆட்டத்தை (அக்டோபர் 29-ந் தேதி) லாகூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல தயங்கி வந்தனர். இந்த நிலையில் இலங்கை அணி லாகூரில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கை வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி செய்து உள்ளது.
Tags:    

Similar News