செய்திகள்

தங்களுக்கு சாதகமான வகையில் ஆடுகளம் தயார் செய்தால், இலங்கை தப்பிக்கும்: காம்பீர்

Published On 2017-07-22 12:55 GMT   |   Update On 2017-07-22 12:55 GMT
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி தங்களுக்கு சாதகமான வகையில் ஆடுகளத்தை தயார் செய்தால் சரியான போட்டியை கொடுக்க முடியும் என காம்பீர் கூறியுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 26-ந்தேதி காலே மைதானத்தில் தொடங்குகிறது. கடந்த முறை இந்தியா இலங்கை மண்ணில் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது. தற்போதும் கைப்பற்றும் எண்ணத்தில் உள்ளது.

கடந்த முறை இலங்கை தொடரை கைப்பற்றிய பின் சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது கிடையாது. தொடர் வெற்றிகள் மூலம் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. விராட் கோலி, புஜாரா, ரகானே, லோகேஷ் ராகுல் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்களும் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா, மொகமது ஷமி போன்ற பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

இவர்களை எதிர்த்து இலங்கை அணி வெற்றி பெறுவது எளிதான காரியம் இல்லை. இதையும் மீறி இலங்கை வெற்றி பெற வேண்டுமென்றால், தங்களுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைக்க வேண்டும் என்று காம்பீர் கூறியுள்ளார்.

இதுகுறித்து காம்பீர் கூறுகையில் ‘‘இந்தியா தொடரை தங்களுக்கு சாதகமான வகையில் தொடங்கும். ஏனென்றால், இந்தியா நம்பர்-1 அணியாக உள்ளது. இலங்கை அணி தற்போது விளையாடும் வழியில் சென்றால் இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் பந்து வீச்சால் நெருக்கடி கொடுக்க முடியாது. இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் ஆடுகளத்தை அமைத்தால் மட்டுமே இலங்கை அணியால் ஆதிக்கம் செலுத்த முடியும்.

இலங்கை அணியால் 20 விக்கெட்டுக்களை வீழ்த்த முடியும் என்றால் மட்டுமே அவர்களால் போட்டி போட முடியும். 20 விக்கெட்டை வீழ்த்தும் வகையில் ஆடுகளம் அவர்களுக்கு சாதகமாக அமைக்க வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News