செய்திகள்

20 ஓவர் போட்டி இருந்திருந்தால் 2003 உலக கோப்பை முடிவு மாறியிருக்கும்: தெண்டுல்கர்

Published On 2017-05-24 05:14 GMT   |   Update On 2017-05-24 05:14 GMT
2003-ம் ஆண்டு 20 ஓவர் போட்டி நடைமுறையில் இருந்திருந்தால் உலக கோப்பை இறுதிப்போட்டி முடிவு மாறியிருக்கலாம் என்று தெண்டுல்கர் கூறி உள்ளார்.
மும்பை:

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் நல்ல பார்மில் இருந்தார். 1996-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) அரை இறுதியில் இலங்கையிடம் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு முனனேறிய இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோதியது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 359 ரன் குவித்தது. இந்தியா 234 ரன்னுக்குள் ஆல்-அவுட் ஆகி கோப்பையை இழந்தது. அதன்பின் தெண்டுல்கரின் உலக கோப்பை கனவு 2011-ம் ஆண்டு நிறைவேறியது.



இந்த நிலையில் 20 ஓவர் போட்டி 2003-ம் ஆண்டு இருந்திருந்தால் உலக கோப்பை இறுதிப்போட்டி முடிவு மாறியிருக்கலாம் என்று தெண்டுல்கர் கூறி உள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்று படமாக ‘சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ் படத்தின் சிறப்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தெண்டுல்கர் கூறியதாவது:-



20 ஓவர் கிரிக்கெட் முறையால் வீரர்களின் செயல்பாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் 359 ரன் என்பது மிகப்பெரிய இலக்காகும். இப்போதும் அப்படி இருந்தாலும் 340 ரன் இலக்குகளை கூட எட்டி உள்ளோம்.

போட்டியில் முறை, விதிகள் சூழ்நிலைகள் என அனைத்துமே மாறியுள்ளதே இதற்கு காரணம். 20 ஓவர் போட்டி காரணமாக வீரர்களின் மனநிலை உள்பட அனைத்தும் மாறியுள்ளதாக நினைக்கிறேன்.

2003-ம் ஆண்டு 20 ஓவர் போட்டி நடைமுறையில் இருந்திருந்தால் உலக கோப்பை இறுதிப்போட்டி முடிவு மாறியிருக்கலாம். இந்திய வீரர்கள் அந்த ஆட்டத்தை வேறு விதமாக கையாண்டிருப்பார்கள். தற்போது அதே வீரர்களை கொண்டு விளையாடினால் அதன் முடிவு வேறு மாதிரியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News