இந்தியா

தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர்ச்சிக்கு சாதகமான அரசியல் சூழல் நிலவுகிறது- சி.டி.ரவி பேட்டி

Published On 2022-07-25 05:22 GMT   |   Update On 2022-07-25 05:22 GMT
  • தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இருக்கிறது.
  • எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி வலுவடைந்து வருவதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன.

புதுடெல்லி:

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோது பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்து கட்சி விவகாரங்கள் தொடர்பாக பேச திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் பா.ஜனதா தலைமையை பொறுத்த வரை அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படுவதை விரும்ப வில்லை. அனைத்து அணிகளையும் இணைத்து வைக்கவே விரும்புவதாக கூறப்படுகிறது.

பா.ஜனதாவின் சமரச பேச்சை விரும்பாததால் மோடி, அமித்ஷாவை சந்திப்பதை தவிர்த்து விட்டு எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பி விட்டார்.

இந்த நிலையில் அகில இந்திய பா.ஜனதா செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி. ரவி கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இருக்கிறது. எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மட்டுமல்ல அதில் உள்ள ஒவ்வொருவரிடமும் நல்ல நட்புடன் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். அ.தி.மு.க.வில் இப்போது உள்கட்சி பிரச்சினை உள்ளது.

கடந்த 2021 வரை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சராகவும் அதிகாரம் மிகுந்த இரண்டாவது தலைவராகவும் இருந்தார். தொடர்ந்து அந்த கட்சியை யார் தலைமை தாங்கி வழி நடத்தினாலும் அவர்களுடன் எங்கள் நட்பு தொடரும்.

கடந்த 50 ஆண்டுகளாக இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. தற்போது பா.ஜனதா திராவிடத்தில் அடங்கிய இந்துத்துவா, தேசிய சிந்தனை, தமிழின் பெருமை, வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை முன்னெடுத்து வருகிறது. இதை மக்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை பா.ஜனதா வளர்ச்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால் தி.மு.க. பலமடையும். பா.ஜனதாவுக்கு ஆளும் தி.மு.க. அரசை எதிர்த்து அரசியல் செய்ய ஒரு வாய்ப்பை கொடுத்து இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி வலுவடைந்து வருவதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜனதாவின் செயல்பாடுகளால் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News