இந்தியா

பிரதமர் மோடியுடன் இன்று சவுதி இளவரசர் சந்திப்பு

Published On 2023-09-11 08:46 GMT   |   Update On 2023-09-11 08:46 GMT
  • ஜி.20 மாநாட்டில் கலந்து கொண்ட சவுதி அரேபிய இளவரசர் மற்ற தலைவர்கள் போல நாடு திரும்பவில்லை.
  • இரு நாட்டு உறவு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினார்கள்.

புதுடெல்லி:

சவுதி அரேபிய பிரதமரும், சவுதி இளவரசருமான முகமது பின் சல்மான் அல் சவுத் ஜி.20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக இந்தியா வந்தார்.

அவர் 2-வது முறையாக இந்தியாவுக்கு வந்தார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற் கொண்டு இருந்தார்.

ஜி.20 மாநாட்டில் கலந்து கொண்ட சவுதி அரேபிய இளவரசர் மற்ற தலைவர்கள் போல நாடு திரும்பவில்லை. அரசு முறை பயணமாக டெல்லியிலேயே தங்கினார்.

சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அல்சவுத்துக்கு இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் சவுதி இளவரசரை வரவேற்றனர். மூவரும் ஒன்றாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து 12 மணியளவில் பிரதமர் மோடியும், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானும் ஐதராபாத் இல்லத்தில் சந்தித்தனர்.

இரு நாட்டு உறவு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினார்கள். வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாடுகள் இடையே கையெழுத்திடப்படும்.

கடந்த சனிக்கிழமை இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை கப்பல் மற்றும் ரெயில் இணைப்பு வழித்தடத்தை தொடங்குவதற்கான வரலாற்று ஒப்பந்தத்தை அறிவித்து இருந்தன.

ஜனாதிபதி திரவுபதி முர்முவை மாலை 6.30 மணியளவில் சவுதி அரேபிய இளவரசர் சல்மான் சந்திக்கிறார். இரவு 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் தனது நாட்டுக்கு அவர் புறப்படுகிறார்.

Tags:    

Similar News