இந்தியா

5 மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு- இந்தியாவில் ஒரே நாளில் 20,139 பேருக்கு கொரோனா

Published On 2022-07-14 04:46 GMT   |   Update On 2022-07-14 04:46 GMT
  • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 16,482 பேர் மீண்டுள்ளனர்.
  • இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்தை கடந்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் புதிதாக 20,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

நேற்று பாதிப்பு 16,906 ஆக இருந்தது. இந்நிலையில் பாதிப்பு ஒரேநாளில் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 18-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 22 ஆயிரமாக இருந்தது. அதன் பின்னர் 5 மாதங்களுக்கு பிறகு தற்போது தினசரி பாதிப்பு மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 89 ஆயிரத்து 989 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 16,482 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்தை கடந்துள்ளது. தற்போது 1,36,076 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொற்று பாதிப்பால் மேலும் 38 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,25,557 ஆக உயர்ந்துள்ளது.

நாடுமுழுவதும் நேற்று 13,44,714 டோஸ்களும், இதுவரை 199 கோடியே 27 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News