திருமண ஆசைக்காட்டி 15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய பாரதிய ஜனதா இளைஞரணி நிர்வாகி கைது
- ரஞ்சித் என்பவருடன் பழக்கம் இருந்ததாக சிறுமி தெரிவித்தார்.
- ரஞ்சித் அந்த பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு அருகே மலம்புழா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது.
இது பற்றி சிறுமி, பெற்றோரிடம் கூறினார். அவர்கள் சிறுமியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
அதிர்ந்து போன டாக்டர்கள், இதுபற்றி குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 26) என்பவருடன் பழக்கம் இருந்ததாக சிறுமி தெரிவித்தார். ரஞ்சித் அந்த பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார்.
அவர் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அப்போது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ரஞ்சித் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு விசாரணைக்கு பின்னர் ரஞ்சித் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.