ரூபாய் நோட்டுகளில் தாகூர், அப்துல் கலாம் படங்கள்- ரிசர்வ் வங்கி பரிசீலனை
- ரூபாய் நோட்டில் வாட்டர் மார்க் எனப்படும் மறைவாக தெரியும் வகையில் மகாத்மா காந்தியின் படம் கூடுதலாக இடம்பெறுகிறது.
- வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோரின் படங்களை வெளியிட ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்து வருகிறது.
புதுடெல்லி:
ரூபாய் நோட்டுகளில் தற்போது மகாத்மா காந்தி படம் மட்டுமே இடம் பெறுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக மற்ற தேச தலைவர்களின் படங்களையும் ரூபாய் நோட்டுகளில் இடம் பெற செய்வதற்கான பரிசீலனை நடந்து வருகிறது.
அதேநேரத்தில் ரூபாய் நோட்டுகளில் வழக்கமான இடத்தில் மகாத்மா காந்தியின் படமும் இருக்கும். மேலும் ரூபாய் நோட்டில் வாட்டர் மார்க் எனப்படும் மறைவாக தெரியும் வகையில் மகாத்மா காந்தியின் படம் கூடுதலாக இடம்பெறுகிறது.
இப்போது அந்த இடத்தில் வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோரின் படங்களை வெளியிட ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்து வருகிறது.
ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய வெளியீட்டு அமைப்பு ஆகியவை இணைந்து மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், அப்துல்கலாம் ஆகியோரின் தலா 2 'வாட்டர்மார்க்' படங்களை டெல்லி ஐஐடி பேராசிரியர் திலீப் டி.சகானிக்கு அனுப்பியுள்ளது. இவர்தான் 'வாட்டர் மார்க்' படங்களை சிறப்பாக தேர்வு செய்து இறுதி ஒப்புதலுக்கு அரசுக்கு பரிசீலிப்பவர் ஆவார்.
தற்போது அவருக்கு படங்கள் அனுப்பப்பட்டு இருப்பதன் மூலம் ரவீந்திரநாத் தாகூர், அப்துல்கலாமின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது.