இந்தியா

பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசிய போது எடுத்த படம்.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்துவிட்டது: பினராயி விஜயன்

Published On 2022-09-26 02:50 GMT   |   Update On 2022-09-26 02:50 GMT
  • பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
  • அரசியல் கட்சிகள் பல கொள்கைகளுடன் செயல்பட்டு வருகிறது.

பெரும்பாவூர் :

திருச்சூரில் உள்ள வித்தியார்த்தி கார்னர் அரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் அழிக்கோடு ராகவனின் 50-வது நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பல அரசியல் கட்சிகள் பல கொள்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. அவற்றிற்கு எல்லாம் ஒரே வடிவம் இல்லை. ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி வேறொரு மாநிலத்தில் வேறொரு கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. இந்த நிலையில் மத்தியில் பா.ஜனதா அரசுக்கு எதிராக இது போன்ற கட்சிகள் ஒன்று திரண்டு நிற்கின்றன. பா.ஜனதா மீண்டும் அதிகாரத்தில் வந்தால் மதச்சார்பின்மை என்ற கொள்கை குழி தோண்டி புதைக்கப்படும் என்பது அவர்களுடைய சிந்தனை. அதற்காக அவர்கள் ஒன்று திரண்டு நிற்கின்றனர்.

சாதி, மத பேதங்களுக்கு எதிராக சக்தியுடன் போராட காங்கிரசுக்கு தற்போது இயலவில்லை. தான் எப்போது வேண்டுமானாலும் பா.ஜனதாவில் சேர தயாராக இருப்பது போன்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் செயல்பட்டு வருகிறார். இதுவே வெளிமாநிலங்களிலும் பல்வேறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் மன நிலையாக உள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலரும் பா.ஜனதாவில் சேர்ந்து வருகின்றனர். பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

எனவே தான் அவர்கள் அவ்வாறு ஒரு நிலையை எடுத்துள்ளனர். இதன் மூலம் இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர், காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து அனைத்துக் கட்சிகளையும் ஒன்றாக இணைத்து இடது முன்னணி என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது அழிகோடு ராகவனின் பெரும் முயற்சி என்று அவருக்கு புகழாரம் சூட்டினார்.கூட்டத்தில் பி.ஜெயராஜன், கே. சீ.மொய்தீன் எம்.எல்.ஏ, வீ.ஒ.தேவசி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News