இந்தியா

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்... காரணம் இதுதான்

Published On 2023-12-09 09:51 GMT   |   Update On 2023-12-09 10:19 GMT
  • திருமணத்திற்காக மணமகனும், மணமகளும் தயாராகினர்.
  • பெற்றோர், உறவினர்கள், சமாதானம் செய்தும் ஐஸ்வர்யா திருமணத்திற்கு மறுத்து விட்டார்.

சித்ரதுர்கா:

கர்நாடக மாநிலத்தில் மணமகன் தாலி கட்ட இருந்த நேரத்தில் மணமகள் ஒருவர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதன் விவரம் வருமாறு:-

சித்ரதுர்கா மாவட்டம் ஹோசதுர்கா தாலுகாவை சேர்ந்த மஞ்சுநாத்துக்கும், சல்லகெரே தாலுகாவை சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் பேசப்பட்டது. இதை தொடர்ந்து திருமணத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

இந்நிலையில், 6-ந்தேதி மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. மறுநாள் காலை திருமணத்திற்காக மணமகனும், மணமகளும் தயாராகினர். சம்பிரதாயங்கள் முடிந்த நிலையில், மணமகன் மஞ்சுநாத் தாலிகட்ட நெருங்கி வந்தபோது, திடீரென திருமணம் செய்து கொள்ள மணமகள் ஐஸ்வர்யா எதிர்ப்பு தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பெற்றோர், உறவினர்கள், சமாதானம் செய்தும் ஐஸ்வர்யா திருமணம் செய்ய மறுத்து விட்டார். மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று ஐஸ்வர்யா திட்டவட்டமாக தெரிவித்தார்.

சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தபோது, திருமண பேச்சின் ஆரம்பத்தில் மணமகள் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, பிசிஏ படிக்க அவருக்கு சீட் கிடைத்துள்ளது. இதனால், தான் மேல்படிப்பு படிக்க வேண்டும் என மணமகள் கூறியபோது, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கட்டாயப்படுத்தி மணமேடை வரை அவரை அழைத்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

திருமண ஏற்பாடுகளுக்கு மணமகன் வீட்டார் செய்த செலவுக்காக ரூ.3 லட்சம் தருவதாக பெண்ணின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News