இந்தியாவிலும் பரவியது குரங்கு அம்மை நோய்... கேரளாவில் ஒருவருக்கு பாதிப்பு
- குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
- நோய் பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் உயர்மட்டக்குழு கேரளா விரைகிறது.
திருவனந்தபுரம்:
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த குரங்கு அம்மை வைரஸ் தைவான் மற்றும் கொலம்பியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. இந்தியாவில், சில சந்தேகத்திற்கிடமான சில தொற்று பாதிப்புகள் இருந்தது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த 12ம் தேதி கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பின் அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
தற்போது அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் அவருடன் தொடர்புடைய 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யபட்டதையடுத்து, ஆய்வு செய்ய மத்திய அரசின் உயர்மட்டக்குழு கேரளா விரைகிறது.