இந்தியா

காணொலி வாயிலாக விசாரணைக்கு ஆஜராக தயார்: அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2024-03-04 05:01 GMT   |   Update On 2024-03-04 05:01 GMT
  • தனக்கு அனுப்பப்படும் சம்மன் சட்ட விரோதமானது என கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வருகிறார்.
  • ஏழு முறை சம்மனை நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது காணொலி வாயிலாக ஆஜராக இருப்பதாக தகவல்.

டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை 8-வது முறை சம்மன் அனுப்பியிருந்தது.

இதனால் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் காணொலி வாயிலாக ஆஜராக தயார் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தனக்கு அனுப்பப்பட்ட சம்மன் சட்ட விரோதமானது என அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணை என்ற பெயரில் அழைத்து கைது செய்து, ஆம் ஆம்தி கட்சியை அழிக்க பா.ஜனதா அமலாக்கத்துறை மூலம் சதி செய்வதாக அக்கட்சி சார்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லை. அவரை ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிட வேண்டும் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை நடத்துவதற்கான எந்த ஏற்பாடும் இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த மாதம் 27-ந்தேதி அமலாக்கத்துறை 8-வது முறையாக சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News