இந்தியா
பிரியங்கா காந்தி

முதல்- மந்திரி வேட்பாளர் இல்லை: பிரியங்கா அந்தர் பல்டி!

Published On 2022-01-23 06:37 GMT   |   Update On 2022-01-23 06:37 GMT
உ.பி. தேர்தல் பிரசாரத்தில் என்னை தவிர வேறு காங்கிரஸ் தலைவர்களின் முகத்தையாவது நீங்கள் பார்க்கிறீர்களா? என பிரியங்கா காந்தி தெரிவித்திருந்தார்.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி வரிந்துகட்டிக்கொண்டு களம் இறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி உ.பி. சட்டசபை தேர்தல் பணிகளில் முழுமூச்சாக இறங்கி உள்ளார். உத்தர பிரதேச காங்கிரஸ் வேட்பாளர்களில் 40 சதவீதம் அளவுக்கு பெண்களையும் அவர் களம் இறக்கி இருக்கிறார்.

இருப்பினும் உத்தர பிரதேசத்தில் காங்கிரசின் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகாமலேயே உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்று பிரியங்கா காந்தியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர் உ.பி. தேர்தல் பிரசாரத்தில் என்னை தவிர வேறு காங்கிரஸ் தலைவர்களின் முகத்தையாவது நீங்கள் பார்க்கிறீர்களா? உ.பி.யில் என் முகத்தை எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று பதில் அளித்து இருந்தார்.

இதன்மூலம் உத்தர பிரதேசத்தில் முதல்- அமைச்சர் வேட்பாளராக பிரியங்கா காந்தியே விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும், இதனை அவரே சூசகமாக தெரிவித்துள்ளார் எனவும் செய்திகள் வெளியானது. இது அரசியல் அரங்கில் பரபரப்பான பேச்சாகவும் அமைந்திருந்தது.

இந்த நிலையில் பிரியங்கா காந்தி திடீரென அந்தர் பல்டி அடித்துள்ளார். முதல்- அமைச்சர் வேட்பாளர் தொடர்பாக நேற்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது, ‘நிருபர்கள் திரும்பத்திரும்ப ஒரே கேள்வியை (முதல்-அமைச்சர் வேட்பாளர் பற்றி) எழுப்பியதால் நான் அது போன்று எரிச்சலில் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.



எனது முகத்தை எங்கும் காணலாம் என்றுதான் நான் கூறினேன். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும். நான் தேர்தலில் போட்டியிட்டாலும் முதல்வர் வேட்பாளராக அதனை கருத முடியாது’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரியங்காவின் இதுபோன்ற குழப்பமான கருத்துக்கள் உத்தர பிரதேச காங்கிரசார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News